கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பால் கை கழுவுவது பற்றிய விழிப்புணர்வு பெருகி இருக்கிறது. சாப்பிடும் சமயத்தில் மட்டுமே கை கழுவுவதில் அக்கறை கொள்பவர்கள், இப்போது எந்த வேலையை செய்து முடித்தாலும் உடனே கைகளை கழுவுவதற்கு பழகிவிட்டார்கள். கைகளை தூய்மையாக வைத்துக்கொள்வதுபோல் கை விரல் நகங்களை சுத்தம் செய்வதற்கும் மறக்காதீர்கள் என்பது சுகாதார அதிகாரிகளின் வேண்டுகோளாக இருக்கிறது. ‘விரல் நகங்களின் இடுக்குகளில் கிருமிகள் தங்கி இருந்து நோய் தொற்றுகளை பரப்பக்கூடும்’ என்கிறார்கள்.
இதுகுறித்து தோல் மருத்துவர் டோரிஸ் கூறுகையில், “கைகளை கழுவும்போது மேற் பரப்பில் படிந்திருக்கும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட கிருமிகள் வெளியேறும். அந்த சமயத்தில் விரல் நகங்கள் தூய்மையாக பராமரிக்கப்படாவிட்டால் அவற்றுக்குள் அந்தக் கிருமிகள் நுழைந்துவிடும். நூற்றுக்கணக்கான பாக்டீரியாக்கள், சில வைரஸ் கிருமிகள் உயிர்வாழ்வதற்கு விரும்பும் பகுதியாக விரல் நகங்கள்தான் இருக்கின்றன. ஆதலால் கைகளை சுத்தம்செய்யும்போது விரல் இடுக்குகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’’ என்கிறார்.